mazhai -11


மழை – 11


கொஞ்சமும் இருமாமல், செருமாமல் அந்த உருளியில் இருந்த மொத்த மதுவையும் தன் வயிற்றிற்கு தாரை வார்த்து இருந்தாள் பூங்கொடி.

புறங்கையால் தன் வாயை துடைத்தவள், பெரிய ஏப்பம் ஒன்றை வெளியேற்றிவிட்டு, தனக்கு அருகிலிருத்த மகிழனின் தலைமுடியை சற்றே எக்கி வாசம் பிடித்தாள்.

மகிழன் அதிர்ச்சியின் பிடியிலிருந்து விடுபடாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை.

பூங்கொடியில் உடலில் கலந்த ஆல்கஹால் மெல்ல மெல்ல தன் வேலையை காட்டத் துவங்கியிருந்தது.

அவனைப் பார்த்து சப்பணங்காலிட்டு அமர்ந்தவள், இரு கரத்தினையும் வேகமாய் தட்டியபடி, “செம்ம செம்ம... செம்ம கதை மிஸ்டர் யானி... யாராச்சும் டைரக்டர்கிட்ட கொடுத்தா மாஸ் படம் எடுப்பான். யப்பா என்ன பீல்... என்ன ட்விஸ்ட்....’’ என்றவள் இரு விரல்களை வாயில் நுழைத்து விசிலடித்தாள்.

அர்த்தராத்திரியில் அந்த உற்சாக ஒலி, உறங்கிக் கொண்டு இருப்பவர்களின் உறக்கத்தை பறித்து விடும் என்று உணர்ந்த மகிழன் வேகமாய் அவள் அருகில் வந்து தன் உள்ளங்கையால் ஓசை எழுப்பும் அவள் செப்பு வாயை சிறை செய்தான்.

“ஷ்.... பூங்கொடி... என்ன செய்ற நீ..? இவ்ளோ சத்தம் போட்டா அப்பார்ட்மென்ட் செக்ரட்ரியே எழுந்து வந்துடுவார். கொஞ்சம் அமைதியா பேசு.’’ என அவளுக்கு மென் குரலில் ஆணையிட, தன் வாயிலிருந்த அவன் கரத்தை கொஞ்சம் கீழே இறக்கியவள், தனக்கு அருகிலிருந்தவன் மடி மீது ஏறி அமர்ந்து, அவன் காதுகளில் மெல்ல, “சரி... இனி உங்க காதுல மெதுவா பேசுறேன். இது ஓகே வா..’’ என தன் இதழ்கள் அவன் செவிகளில் உரச முணுமுணுத்தாள்.

அவளின் செய்கைகள் மகிழனை கொஞ்சம் கொஞ்சமாய் பேரவஸ்தையில் தள்ளிக் கொண்டிருந்தது.

“சரி... சரி முதல்ல என் மடியை விட்டு இறங்கி உக்காரு பூங்கொடி.’’ என்றவன் அவளை தன் மீதிருந்து இறக்க முயன்றான்.

அவளோ இன்னும் அவனோடு அட்டைப் போல ஒட்டிக் கொண்டு, “அதெல்லாம் முடியாது. நீங்க சொன்ன மொக்க கதையை நான் ஒன்றரை மணி நேரமா கேட்டேன்ல. இப்ப என்னோட கதையை நீங்க கேட்டு தான் ஆகணும் மிஸ்டர் யானி.’’ என்று பெரிய மகாராணி போல ஆணையிட்டாள்.

ஏதோ சிம்மாசனத்தில் அமர்வதைப் போல அவன் மடியில் நன்றாய் சாய்ந்து அமர்ந்தவள், “எங்க வீட்ல தான் என்னை ஒரு குட்டி சைல்டுன்னு கூட பாக்காம கட்டிக் கொடுத்தாங்கன்னா... நீ எப்படி மேன் என் கழுத்துல தாலி கட்டுவ..?’’ என்றவள் தன் கை விரல்களை முஸ்டியாக்கி அவன் மூக்கில் ஒரு குத்துவிட்டாள்.

அவள் விரல்கள் கொடுத்த வலியில், “அம்மா..’’ என்று முனகியவன், “என்னது நீ சைல்ட்டா ... அதுவும் குட்டி சைல்டா..? உன்ன பார்த்தா அப்படி தெரியலையே பூங்கொடி.!’’ என்றவன் தன் இருகரத்தையும் அவள் இடுப்பை சுற்றி படரவிட்டு சற்றே அழுத்தம் கூட்டினான்.

எத்தனை நேரம் தான் அவனும் தாக்கு பிடிப்பான். பூங்கொடியின் அருகாமையும், உதிரத்தில் கலந்திருந்த மதுவின் ஆதிக்கமும், அவனை கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமிழக்க செய்து கொண்டிருந்தது.

பலம் கொண்ட மட்டும் அவனது கைகளை அழுத்திக் கிள்ளிய பூங்கொடி, “ஏய் சாணி.. உன் கையை கீழ வை. இதெல்லாம் பேட் டச்.’’ என்று அவனை நோக்கி முறைத்தாள்.

கரத்தை பின்னுக்கு  இழுத்தாலும், அவளை அழுந்த உரசி அமர்ந்தவன், “ஓ.. அப்போ மேடம்க்கு குட் டச்.. பேட் டச் எல்லாம் தெரியுமா..? இத்தனை நாளா இது எனக்கு தெரியாம போச்சே..!’’ என்று சற்றே கேலிக் குரலில் இயம்பியவன் அவளது கன்னத்தில் மென்மையாய் இதழ் பதித்தான்.

“இப்போ சொல்லு இது குட் டச்சா...? பேட் டச்சா...?’’ என வினவ, அவன் மீசை கன்னத்தில் ஏற்படுத்திய குறுகுறுப்பில் கிளுக்கி சிரித்துவிட்டு, “ரொம்ப நல்லா இருக்கே  இந்த பீல்... அப்போ இது குட் டச் தான்,’’ என்று விட்டு தானே இன்னும் கொஞ்சம் நகர்ந்து தன் கன்னத்தை அவன் மீசை முடிகளில் உராய்ந்து பார்த்தாள்.  

கண் மூடி மகிழன் அந்த நொடிகளை அனுபவித்தான். இருவரும் மெல்ல மெல்ல வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென மகிழனின் மடியிலிருந்து எழுந்து கொண்ட பூங்கொடி, “சாணி.. நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல..!’’ என்று உதட்டை பிதுக்கினாள்.

அவளை இழுத்து மீண்டும் தன் மடியமர்த்திக் கொண்டவன், “என்ன கேள்விடி... என்னோட கிலுகிலுப்பு..’’ என்று அவளின் கன்னத்தில் தன் கன்னத்தை உரசியபடி கேட்டு வைத்தான்.

“அதான் நீ எவ்ளோ பேமஸ்... நீ ஏன் இந்த குட்டி சைல்டை கட்டிகிட்ட..?’’ என மீண்டும் தன் கேள்வியை அவன் முன் வைத்தாள்.

அவள் கேள்வியில் பெரிதாய் சிரித்தவன், “அது சரி... இந்த குட்டி சைல்டு ஏன் இந்த செகண்ட் ஹான்ட் ஹாண்டிகேப்ட் பர்சனை கட்டிகிச்சாம்.’’ என்று கேள்வியை அவளை நோக்கியே திருப்பிவிட்டான்.

அவன் கன்னத்தை நறுக்கென்று கிள்ளியவள், “நீ ஒன்னும் செகண்ட் ஹான்ட் இல்ல... நல்லா புது ராயல் என்பீல்ட் மாதிரி பளபளன்னு தான் இருக்க சரியா..! இனி இப்படி என்கிட்ட சொல்லாதா.. சொன்ன உன்கிட்ட காய் தான் போ..’’ என்றவள் மீண்டும் அவன் மடியிலிருந்து இறங்கி அமர, மகிழன், “சரி.. சரி இனி சொல்ல மாட்டேன்..’’ என்று மொழிந்துவிட்டு, வம்படியாய் அவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டான்.

“இப்ப தான் குட் பாய்..’’ என்றவள், சரி நான் என்னோட ப்ளாஷ் பேக் சொல்லட்டா. என் வீட்ல நாலு கடா மீசை தடி தாண்டவராயங்க இருக்காங்கல... அதான் என் மூணு அண்ணனும் ஒரு அப்பாவும்.. எல்லாருக்கும் என் மேல ரொம்ப பாசம் தான். ஆனா எப்ப பாரு என்ன இதை செய்யாத அதை செய்யாதன்னு ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பாங்க.

நான் எப்படி தெரியுமா சாணி... என்னை யாரச்சும் நீ இதை செய்ய கூடாது... இல்ல இதை உன்னால செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா உடனே அதை செஞ்சிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பேன்.

எனக்கு எட்டு வயசா இருக்கும் போது பக்கத்து வீட்டுப் பையன் என்னால முங்கு நீச்சல் அடிக்கவே முடியாதுன்னு சொன்னான். விடாப்பிடியா ஒரு மாசம் கத்துகிட்டு அவன் குளிச்சிட்டு இருக்கும் போது, அவனுக்கே தெரியாம முங்கு நீச்சல் போட்டு அவன் ட்ராயரை உருவிட்டு வந்தவ நானு.

தொட்டில் பழக்கம் நடுவுல போயிடுமா என்ன..? காலேஜ் பஸ்ட் இயர் ஜாயின் பண்ணும் போது, சீனியர் பொண்ணுங்க எல்லாம் ஹாஸ்டல்ல சும்மா விளையாட்டுக்கு பீர் குடிக்க சொல்லி ராக் பண்ணிட்டு இருந்தாங்க.

பீர்ல ஹாட் மிக்ஸ் பண்ணி இருந்து இருக்காங்க. அது எங்களுக்கு தெரியல. நாங்க யார் ஒரு மடக்கு குடிச்சாலும் உடனே பயங்கரமா புரைக்கேரி இருமல் வந்துடுச்சி.

அப்ப அங்க இருந்த ஒருத்தி, “ஏய்.. விக்ன்ஷ் சொன்னது சரியா தாண்டி இருக்கு. பொண்ணுங்களால ஒரே கல்ப்ல ஒரு பியர் புல்லா குடிக்க முடியாது போலடி.’’ அப்படின்னு சொல்ல, எல்லாரும் எங்களைப் பார்த்து சிரிச்சாங்க.

எனக்கு பயங்கர கோபம் வந்துச்சு. அவங்க ரூம்ல இருந்த எல்லா பியர் பாட்டிலும் சுட்டுட்டு வந்து தினம் நைட் கொஞ்சம் கொஞ்சமா குடிச்சி எங்க ரூம்ல ப்ராக்டீஸ் செஞ்சேன்.

சரியா ஒரே வாரம், எல்லா சீனியர்சும் கூடி இருந்த டைனிங் ஹால்ல அவங்க முன்னாடி ஒரே கல்ப்ல ஒரு பீரை முழுசா காலி பண்ணி காட்டினேன்.

அந்த பில்டிங்கே அடுத்த நிமிஷம் அப்படி ஒரு விசில் சத்தத்துல அதிர்ந்து போச்சு. அப்ப இருந்து எல்லா சீனியருக்கும் செல்லக் குட்டி நான் தான்.

ஏதோ குடிச்சி காட்டணும்னு நான் பீர் குடிச்சதோட சரி. அதுக்கு அப்புறம் என்னவோ மறுபடி குடிக்கணும்னு எனக்கு தோணினதே இல்ல.

நான் டைனிங் ஹால்ல பீர் குடிச்சி காட்டினதை எந்த பக்கியோ வீடியோ எடுத்து இருந்து இருக்கா. அது எனக்கு அப்ப தெரியவே தெரியாது.

நான் காலேஜ் செகண்ட் இயர் படிச்சிட்டு இருக்கும் போது, எங்க தூரத்து அத்தை பையனுக்கு என்னை பொண்ணு கேட்டு வந்தாங்க. எங்க வீட்ல நான் படிக்கிறதை காரணமா சொல்லி இப்போ கல்யாணம் பண்ற ஐடியா இல்லைன்னு சொன்னாங்க.

ஆனாலும் அவங்க விடாம தொடர்ந்து நச்சரிச்சிகிட்டே இருக்கவும், எங்க மருது அண்ணன், அந்த பையன்கிட்ட இருந்த குடிப்பழக்கத்தை காரணமா காட்டி, குடிக்கிறவனுக்குலாம் பொண்ணு குடுக்குற ஐடியா இல்லைன்னு’ சொல்லி, எப்படியோ அந்த சம்மந்தத்தை கலைச்சி விட்ருச்சி.

அந்தப் பையன் விசேச வீடுகள்ல என்னைப் பார்த்து இருப்பான் போல. எனக்கே தெரியாம என்னை பாலோ பண்ணி என்னைப் பத்தி நிறைய டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கான்.

அதுல அந்த விடீயோ அவன்கிட்ட சிக்கிருச்சி. நாங்க குடும்பத்தோட ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தப்ப, அங்க மேரேஜ் லைவ் டெலிகாஸ்ட் ஆயிட்டு இருந்த டிவியில நான் பீர் குடிச்ச விடீயோவ அத்தனை சொந்தக்காரங்க முன்னாடி லைவ் டெலிகாஸ்ட் பண்ணிட்டான்.

“எல்லார் முன்னாடியும், “இவர் என்னை குடிகாரன்னு சொன்னாரு. என்னை விட இவர் தங்கச்சி மொடா குடிகாரியா இருப்பா போலையே. இனி எந்தப் பய இவளை கட்டிக்கப் போறான். பேசாம பரிசம் போட வந்த எனக்கே கட்டிக் கொடுத்துடுங்க.’’ அப்படின்னு மறுபடி கல்யாணப் பேச்சை வேற தொடங்கிட்டான்.

ஆள் ஆளுக்கு அந்த கல்யாண வீட்ல பேச, அப்பா எல்லார் முன்னாடியும் என்னை ஒரு அறை விட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்.

அவ்ளோ தான் அன்னையோட என் காலேஜ் போச்சு. சுதந்திரம் போச்சு. இருபதே நாள்ல என்னோட பேச்சுலர் தகுதியும் போச்சு. ரொம்ப நாளைக்கு முன்னாடி கேட்டு வந்த உங்க சம்மந்ததுக்கு ஓகே சொல்லிட்டாங்க.

ஏதோ சின்ன அண்ணன் கல்யாணம் முடிஞ்சாலும் அந்த ஊருக்கு போய் நீ உன்னோட படிப்பை தொடரலாம்னு சொன்னது மட்டும் தான் ஒரே ஆறுதல்.

ஆனா டபுள் சர்ப்ரைஸா... நீங்க எனக்கு பிடிச்ச சாணி சாரி சாரி.. யானியாவும் இருந்து இருக்கீங்க. சூப்பர்ல. ஆனா அப்போ அப்போ ரோபோ மோட்க்கு மாறிடுறீங்க. அதான் பிடிக்கலை.

ஏன் மாமா எனக்கு ஒரு டவுட். பசங்க குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்னு சொல்றாங்க. பொண்ணுங்க குடிச்சா மட்டும் எப்படி மானம் கெட்டுப் போகும். நீ பதில் சொல்லு மாமா..?’’ என்று அவனை தாடையை பற்றி உயர்த்தினாள்.

அவள் கண்ணோடு கண் கலந்தவன், “தெரியலையே பூங்கொடி. ஆனா குடிக்கிறது தப்பு. அது மட்டும் நல்லா தெரியும்.’’ என்றுவிட்டு எழுந்து நின்றான்.

நள்ளிரவு நேர குளிர் ஊசியாய் உடலைக் குத்த, கைப்பற்றி தன் மனையாளை எழுப்பியவன், “வா பூங்கொடி...கீழ போகலாம்.’’ என்று அழைத்தான்.

உடனே இரு கரங்களையும் மேலே உயர்த்தியவள், “என்னால நடக்கலாம் முடியாது. என்னை தூக்கிட்டு போ மாமா..’’ என்றாள்.

மகிழன் தயங்கியது ஒரு நொடியே. ஆனால் அடுத்த நொடியே அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன், மெதுவாய் அந்த நான்கடுக்கு மாடிப் படிகளில் மெல்ல மெல்ல இறங்கத் துவங்கினான்.

காதல் எனும் ‘போதை’ மெல்ல மெல்ல அவனுக்குள் ஏறத் துவங்கியிருந்தது.  

Comments

Post a Comment

Popular posts from this blog

mazhai - 12

Mazhai - 15 (Final ud)

mazhai -13