முகப்புத்தகமும் பெண்ணியமும்.....

முகப்புத்தகமும் பெண்ணியமும்.....
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி !’
முண்டாசுக் கவி கொட்டிய கும்மி காதுகளில் ஒலித்த படி தான் இருக்கிறது.
ஆனால் நம் இந்திய.... மன்னிக்கவும்... அவ்வளவு அறிவு விலாசம் அற்றவள் என்பதால் உதாரணத்திற்கு நம் தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம்.
உண்மையில் என் தமிழ் சமூகத்தில் பெண் விடுதலை எந்த புள்ளியில் நின்றுக் கொண்டிருக்கிறது... ?
முன்பு கரண்டி மட்டும் பிடித்த கரத்தில் இன்று கல்வி அறிவின் பட்டயம் இருக்கலாம். ஆனாலும் கரண்டி இன்னும் அவள் கரங்களில் தான் இருக்கிறது.
உணர்ச்சியின் பிடியில் ஒரு ஆண் அட ஒரு ஆண் குழந்தை அழுதால் கூட நீ பெண்ணா என கேலி பேசும் சமூகத்தில் கதறி அழும் பெண் குறித்த உளவியல் என்னவாக இருக்கக் கூடும்..?
நான் பேச வந்த விசயமே வேறு. தலைப்பிற்கு வருகிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் முகப்புத்தகத்தில் இணைந்து இருக்கிறேன். முகப் புத்தகத்தில் கணக்கு வைத்திருக்கும் பெண் ஆணின் பார்வையில் சற்றே மதிப்பிழந்து கீழிறங்கி தான் தெரிகிறாள்.
அப்படியெல்லாம் இல்லை என்று கம்பு சுழற்றுவதற்கு முன் ஆண்கள் கொஞ்சம் நிதானிக்கவும்.
இங்கே குடும்பம் குடும்பமாய் முகப் புத்தகத்தில் இருப்போர் இருக்கலாம். அதில் தன் சொந்த மனைவி, தங்கை, மகள் இன்னும் பிற ரத்த பெண் உறவுகள் முகப் புத்தகத்தில் கணக்கு வைத்திருந்தால்,
“உங்க போட்டோ எல்லாம் பேஸ் புக்ல அப்லோட் பண்ணாதீங்க. அது அவ்ளோ சேப் இல்ல. தெரியாத ஐ.டில இருந்து பிரண்ட் ரிக்வஸ்ட் வந்தா அதை அக்கப்ட் பண்ணாதீங்க.’’ இப்படி நிறைய அறிவுரைகளை அவர்களுக்கு ஆண்களில் 90 சதவீதம் பேர் அள்ளி தெளித்து இருக்கலாம்.
அதில் சில எதார்த்த உண்மைகள் இருந்த போதும்.............
முகப் புத்தகம் என்பது நம்முடைய ரசனைகளை, படைப்பாற்றலை, செய்திகளை... பகிர்ந்து கொள்ள கூடிய ஒரு பொது தளம்.
பள்ளியின் முதல் நாள் வகுப்பறை அன்னியர்களாலேயே நிரம்பி இருக்கும். ஆனால் இறுதி நாளில்....
ஆண்கள் பெண்களை தினம் தினம் நேருக்கு நேர் பேருந்து நிறுத்தத்திலும், பொது இடங்களிலும், அலுவலங்களிலும், கல்லூரிகளிலும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.
இங்கெல்லாம் ஒரு பெண் எத்துனை அழகாய் இருந்தாலும், (பின்னால் சுற்றி காதலாகி கசிந்துருகி வாழ்வதெல்லாம் வேறு பிரிவு) மிஞ்சிப் மிஞ்சிப் போனால் ஒரு ரசனையான பார்வையோடு கடந்து விட முடிகின்ற அவர்களால்.... ஒரு பெண் தன் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பதிவேற்றினால் ஏன் அப்படி கடந்து போக முடிவதில்லை.
என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார்...
“பேச்சுலர் ரூம் பசங்க எல்லாம் செவத்துல கவர்ச்சி நடிகை போட்டோவா ஒட்டி வச்சி ரசிப்பாங்க. இப்ப ஒரு பையன் கிட்ட இருக்க ஒவ்வொரு ஸ்மார்ட் போனுமே பேச்சுலர் பசங்க ரூம் மாதிரி.
பொண்ணுங்க போட்டோ பேஸ் புக்ல அப்லோட் பண்ணா.... அவனுக்கு பிடிச்சி இருந்தா அடுத்த நிமிஷம் அது அவன் சர்கிள்ள ஷேர் ஆக ஆரம்பிக்கும்.’’ என.
எனக்கு உண்மையில் இது பேரதிர்ச்சி தான். முகபுத்தகத்தில் தன் புகைப்படத்தை ஒரு பெண் பதிவேற்றினால் அதை அவளின் அனுமதியின்றி ஆண்கள் அவரவர் எண்ணம் போல பயன்படுத்துவது என்றால்... இது எத்துனை பெரிய... வெறி நிறைந்த ஆணாதிக்க செயல்.
எப்பொழுது எங்கே பெண்களுக்கு வன் கொடுமை நிகழ்ந்தாலும்... காவல் துறையும், சில சமூக ஆர்வலர்களும்.... உடனே மைக் துண்டை விழுங்கியது போல..
‘பெண்களே உங்கள் புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பதியாதீர்கள்’ என கத்த தொடங்கி விடுகிறார்கள்.
நான் தெரியாமல் கேட்கிறேன். சாலையில் நடந்து செல்லும் பெண்ணின் மீது ஆசிட் தாக்குதல் நடக்கிறதே.... உடனே பெண்ணை வீதியிலேயே நடக்க வேண்டாம் என தடை விதித்து வீட்டிற்குள் வைத்து பூட்டிவிடலாமா..?
எத்துனை படித்தும், எத்துனை திறன் கைவரப் பெற்றாலும், பெண்களுக்கு எதிரான அநீதி நீண்டுக் கொண்டே தான் இருக்கிறது.
அந்த அநீதிக்கு எதிராக நாம் போராட, எதிர்த்து நிற்க பழக வேண்டுமா..? அல்லது நம் முகத்தை ஒளித்து மறைத்து வாழப் பழக வேண்டுமா..?
முதன் முதலில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனி ஒரு பெண்ணாய் அந்த மருத்துவக் கல்லூரியில் துணிந்து கல்வி பயிலாமல் போயிருந்தால்.... நிச்சயமாய் சொல்கிறேன்.... மருத்துவம் என்பது ஆண்கள் மட்டும் பயிலும் பாடமாய்..... இந்த நூற்றாண்டு வரை இந்தியாவில் நீண்டிருக்கும்.
மதிப்பு மிகு குடும்ப ஆண்களே... உங்கள் மனைவியை... சகோதரியை, மகளை முக புத்தக கணக்கு வேண்டாம் என்று முடக்காதீர்கள்...!
நேற்று ரேசன் கடையில் பொருள் வாங்கும் பொழுது... அம்மாவின் படத்திற்கு அருகில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தைப் பார்த்து ஒரு வயதான மூதாட்டி...
‘இந்த தம்பி யாருப்பா..? எங்க அம்மா போட்டோ பக்கத்துல மாட்டியிருக்க...? அவுக சொந்தமா..?’’ என கேட்டதைப் போல.... உலக... இல்லை இல்லை உள்ளூர் அறிவே இல்லாமல் போக வாய்ப்பு உண்டு.
என்னதான் பேஸ் புக் வெட்டி அரட்டைகளின் களமாய் இருந்தாலும், இன்றைய நிமிட செய்திகளை கூட உடனுக்கு உடனே அள்ளி தருபவையும், சமூகத்தின் நிலையை துகிலுரித்துக் காட்டுபவையும் முகநூல் புத்தகம் தான்.
அதே போல அவர்கள் தங்கள் புகைப்படங்களை பதிய முனைந்தால் முட்டுக்கட்டை போட வேண்டாம்.
பெண்களில் மிஞ்சிப் போனால் இருபது சதவீத பெண்களே முகநூல் கணக்கு வைத்திருப்பர். அதில் தோராயமாய் இரு சதவீத பெண்கள் மட்டுமே தங்கள் முகத்தை வெளிக்காட்டுபவராய் இருப்பர்.
அப்படி நான் இவள் தான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண்களை நோக்கி உங்கள் ஆணாதிக்க, வக்கிர பார்வையை வீசாதீர்கள் ஆண்களே.
ஏன் எனில் இன்று உங்கள் மனைவிக்கு முக புத்தக கணக்கு வேண்டாம் என நிறுத்தி வைத்திருக்கும் உங்களால்... நாளை (இன்னும் ஐந்து பத்து வருடங்கள் கழித்து) உங்கள் மகளை முகநூலில் உலவாதே என்று தடுக்க முடியாது.
உடனே மகனைப் பெற்றவர்கள் அப்பாடா... என பெருமூச்சு விட வேண்டாம். உங்கள் மகனின் மனைவியும் இந்த சமூகத்திலிருந்து உங்கள் வீட்டிற்கு வரவிருப்பவளே.
ஆகையால் முக நூலில் ஒரு பெண் தன் புகைப்படத்தை பதிந்தால்...சாலையில் நடக்கையில் எதிர்படும் அந்நியர்களை கடப்பதைப் போல கடக்கப் பழகுங்கள்.
அவர்கள் ரசனைகள் ஒத்துப் போனால் அவர்களுடன் நட்பு பாராட்டுவது வேறு விஷயம்.
ஆனால் அந்த புகைப்படங்களை கொண்டு.... அவள் குணத்தை நிர்ணயிப்பது... அல்லது அவள் அனுமதியின்றி உங்கள் கீழ்மட்ட ரசனைகளுக்கு பயன்படுத்துவது... ஆணாதிக்கம் என்ற சொல்லையும் தாண்டிய கீழ்மையான செயல்.
பெண்களே எனக்கு முகநூல் கணக்கு கிடையாது என்பதையும், நாம் பேஸ் புக்ல என் போட்டோலாம் போடவே மாட்டேன்பா என்பதும்.... பெருமை அல்ல... காலங்காலமாய் நம் மீது கட்டப்பட்டிருக்கும் அடிமைச்சங்கிலியின் பிடியை நாமே வலுப்படுத்தும் செயல்.
பத்தாயிரம் கணக்குகளில் பத்து பேர் மட்டும் தங்கள் புகைப்படத்தை பதிந்தால் அவர்களுக்கு நாம் இளப்பமாக தான் தெரிவோம்.
பத்தாயிரம் பேரும் நான் இப்படித்தான் என தைரியமாக நம் முகத்தை இங்கே கட்டினால்.... இந்த முகநூல் புத்தகமும்.... நாம் தினம் காய்கறி வாங்க செல்லும் மார்கெட் போல நாம் பயன்படுத்த இலகுவான பாதுகாப்பான இடமாகிவிடும்.
ஏனெனில் இது நம்மோடு கடந்து போகிற முடிந்து போகிற விடயமல்ல....
நாளை நம் மகள்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளவும்.... தங்கள் படைப்பாற்றலை பகிர்ந்துக் கொள்ளவும், தங்கள் புத்தியை கூர் தீட்டிக் கொள்ளவும் இங்கே வரலாம்.
அவர்கள் முகநூலை பயன்படுத்த வரும் போது.... இந்த பொது தளம் உண்மையில் பொது சமூக தளமாய் இயங்க.... இன்றைய பெண்கள் நாம் என்ன செய்யப் போகிறோம்...?
பெண்ணியம் நீளும்..... என் பார்வையில்.
அன்புடன்...
மேக்னா சுரேஷ்.

Comments

Popular posts from this blog

mazhai - 12

Mazhai - 15 (Final ud)

mazhai -13