mazhai - 12

மழை – 12


இன்னும் அரை மணி நேரத்தில் நீச்சல் வகுப்பிற்கு கிளம்ப வேண்டும். ஆனால் ஏனோ பூங்கொடிக்கு அந்த வகுப்பிற்கு கிளம்ப அவ்வளவாய் விருப்பம் இல்லை.

போட்டிகளுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்க, இவளின் பயிற்சியாளரோ பூங்கொடியை பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தார். தினமும் காலை இரு மணி நேரமும், மாலை இரு மணி நேரமும் நீச்சல் குளத்திலேயே முங்கி இருக்க வேண்டிய அவசியம் நேரிட்டது அவளிற்கு.

மறுபுறம் மகிழனின் அலுவலகத்தில் வருடாந்திர தணிக்கை நடை பெற்றுக் கொண்டிருக்க, அவனை கண்ணில் காண்பதே வெகு அறிதாய் இருந்தது.

அன்றைக்கு மதுவின் ஆதிக்கத்தில் இருவரும் ஒரே அறையில் உறங்க, பூங்கொடியின் நெற்றி மீது மகிழன் மெல்லிய முத்தமிட்டது வரை மட்டுமே பூங்கொடிக்கு நினைவிருந்தது.

அடுத்த நாள் காலை அவள் கண் விழித்த போது, ஒரு பெரிய தலையணையை காலுக்கு இடையில் கொடுத்து, அதை கட்டி பிடித்த வண்ணம், பெரிய கட்டிலின் மறுபுறம் மகிழன் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் உறங்கிக் கொண்டிருந்த கோணம் கண்டு பூங்கொடிக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது. அதன் பிறகே நேற்றைய நினைவுகளின் தாக்கம் சரம் தொடுக்க, தன் கதையை கேட்ட மகிழன் என்ன நினைத்துக் கொண்டானோ என்ற கவலையில் அவனை எழுப்பாமல் பூங்கொடி குளிக்க சென்றாள்.

அவள் திரும்பி வந்து பார்கையில் படுக்கை அறை காலியாய் கிடந்தது. அடுத்த அரை மணி நேரத்தில், வேலை செய்யும் பெண் மணி வந்து, காலை உணவை தாயார் செய்துவைத்திருக்க, இருவரும் அமைதியாய் உண்டு, கல்லூரிக்கும், அலுவலுக்கும் கிளம்பினர்.

அன்றைக்கு மாலை பூங்கொடியை ஒரு தனியார் நீச்சல் பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்றவன், தன்னுடைய அலுவலத்தில் ஆண்டு தணிக்கை ஆரம்பிப்பதை காரணம் காட்டி அதோடு, அவளின் நீச்சல் பயிற்சியிலிருந்தும் கழன்று கொண்டான்.

காலை, மாலை என இரு வேளைகளிலும் நீச்சல் பயிற்சி அவளை உள் இழுத்துக் கொள்ள, மகிழனும் இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

இதோ நாளை காலை மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் கலந்துக் கொள்ள, பூங்கொடி சென்னை செல்ல இருக்கிறாள்.

ஏதோ ஒரு வெற்றிடம் அவள் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. என்ன செய்வது என சற்று நேரம் யோசித்தவள், அலைபேசியில் மகிழனை அழைத்து இருந்தாள்.

அழைப்பை ஏற்றவன், சற்று நேரம் கழித்தே, “சொல்லு கொடி..’’ என்றான். இவளும் சற்று இடைவேளிவிட்டே, “பிசியா இருக்கீங்களா..?’’ என்றாள்.

“ஆமா... ஆடிட்டர்ஸ் இன்னும் கிளம்பல..’’ என்ற வார்த்தைகளை முடிப்பதற்குள், “நீங்க எந்த ஆணியை அடிக்கிறதா இருந்தாலும் வந்து என்னை ஸ்விம் கிளாஸ்ல ட்ராப் பண்ணிட்டு அப்புறம் அடிக்கப் போங்க.’’ என்றவள் கோபமாய் அலைபேசியை துண்டித்து படுக்கையில் வீசி எறிந்தாள்.

மகிழனுக்கு அவள் கோபத்தின் காரணம் புரிந்தது. மதுவின் போதையில் இருந்த போது அவனைப்பற்றிய அனைத்து விடயங்களையும் அவளிடம் உளறியது போதை தெளிந்ததும் எண்ணிப் பார்க்கையில் அவனை உள்ளுக்குள் சற்றே குறுக வைத்திருந்தது.

தன் வாய்பிற்காய் பிரிந்து சென்ற காதலி, மனதிற்கு ஒப்பாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள தந்தையிடம் போட்ட ரேஸ் ஒப்பந்தம் என அவளிடம் ஒப்புவித்த அத்தனையும் அவனைப் பொறுத்தவரை அவனை வெகு கீழாக காட்டியிருந்தது.

எந்த நொடி, எப்படி அவனுள் பூங்கொடியின் மீதான காதல் பிறந்தது என்பது அவனிற்கே விளங்கவில்லை. ஆனால் பிறந்த காதலை சொல்ல அவனுக்கு இப்போது தைரியம் போதவில்லை. பூங்கொடியின் மனதினுள் தான் இப்போது ஒரு சுயநலவாதியாய், தனித்து செயல்படும் திறனற்ற மனிதனாய் பதிந்திருப்போம் என்ற நம்பிக்கையே அவன் மனதிற்கு பெரிய பூட்டாகியிருந்தது.

அதனால் முடிந்த அளவு பூங்கொடிடமிருந்து ஒதுங்கிப் போக எண்ணி அதை செயலாற்றிக் கொண்டிருந்தான். பூங்கொடியும் தன் மனதளவில் அப்படித் தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.

தன் நிலை ஊரார் மத்தியில் இறங்கிய பின்பு கட்டிக் கொண்டவள் தானே, அதோடு பெரிய குடிகாரியாய் வேறு இருப்பாளோ..? என்று மகிழன் தன்னை பற்றி எண்ணிக் கொண்டு இருக்கிறானோ என்று எண்ணிய பூங்கொடியின் எண்ணங்களை வலுபடுத்தும்படி மகிழனும் அவளிடமிருந்து விலக பூங்கொடி தனக்குள் மறுகிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் தன் அலைபேசியையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மகிழன், எது வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்று முடிவெடுத்து தன் வாகனத்தை கிளப்பிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

இவன் வருகையை எதிர்பார்த்து பூங்கொடி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். மகிழன் வந்து நிற்கவும் எழுந்து அவனை நன்றாக முறைத்தவள், “உங்க ஸ்விம் ட்ரெஸ் எடுத்துட்டு என் கூட வாங்க.’’ என்று ஆணையிட்டு விட்டு அவன் வாகனத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

மகிழன் தற்சமயம் அவளிடம் எதையும் பேச முடியாது என்பதை உணர்ந்தவன், அவள் சொல்லியபடியே தன் நீச்சல் உடைகளையும் எடுத்துக் கொண்டு, அவளோடு கிளம்பினான்.

வழமையாய் அவள் செல்லும் தனியார் பயிற்சி மையத்தின் வாயிலில் இவன் வண்டியை நிறுத்த, “உள்ள வாங்க..’’ என்றவள், மகிழன் நீந்துவதற்கு தனியாய் கட்டணம் செலுத்தி ரசீதை வாங்கிக் கொண்டிருந்தாள்.

நீச்சல் குளத்தின் உள்ளே வரவுமே மகிழனின் முகம் மாறத் துவங்கியது. “கொடி... ஐ.. கான்ட் டாலரேட் திஸ் சரவுண்டிங். நான் போறேன். நீ ஸ்விம் பண்ணிட்டு வா..’’ என்று அவளிடம் உரைக்க,

“எனக்கு ரொம்ப குழப்பமா இருந்தா எப்பவும் எங்க ஊரு ஆத்துல முங்கு நீச்சல் அடிக்க போவேன். தண்ணிக்குள்ள முங்கி இருக்க நேரம், என் உடம்பும், மனசும் லேசாகி.. எவ்ளோ பெரிய பிரச்சனையா இருந்தாலும், அதை ஈசியா ஏத்துகிற பக்குவத்தை தண்ணி எனக்கு கொடுத்துடும். எனக்கு இன்னைக்கு பிரச்சனைக்கு முடிவு வேணும். ரெண்டு பேரும் தண்ணிக்குள்ள ஒண்ணா போய் தேடலாம் வாங்க.’’ என்றவள் உடை மாற்றும் அறைக்கு செல்ல, மகிழன் மனமே அல்லாமால் தானும் ஆண்கள் உடை மாற்றும் இடம் நோக்கி நகர்ந்தான்.

நீச்சல் உடை மாற்றி, நீராடல் முடித்த பின், அவன் குளம் நோக்கி நடக்க, அவனுக்கு எதிரே, அவனைப் போலவே நீராடிய பூங்கொடி ஈரமாய் வந்து கொண்டிருந்தாள்.

இவள் கால் நுனி சிறு நகமாகி அவளுடன் கலந்துவிட மாட்டோமா..? என அவனுடலின் ஒவ்வொடு செல்களும் தவிக்க, பூங்கொடி மெதுவாய் நடந்து வந்து அவன் கரம் பற்றி, நீர் நோக்கி இழுத்தாள்.

பொதுவாய் அது பூங்கொடி பயிற்சி செய்யும் நேரமாதலால் அங்கு அவர்களை தவிர வேறு யாரும் இல்லை. அவளுக்கு பயிற்சியளிக்க வேண்டிய பயிற்றுனரும் அரை மணி நேரம் தாமதமாய் தான் வந்து இணைந்து கொள்வதாய் அவளிடம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

ஆக நகருக்கு வெளியே இருந்த அந்த மையம், ஒரு வித ஏகாந்தத்திலிருந்தது. முதலில் நீருக்குள் பூங்கொடி இறங்க, அவளை தொடர்ந்து மகிழனும் இறங்கினான்.

இருவரும் நீருக்குள் அமிழ்ந்ததும், ஒருவர் மற்றவர் கையை விடாமல் ஒருவரை ஒருவர் நீருக்குள் ஆழ்ந்து பார்த்தனர். பூங்கொடி, மகிழன் அவளை கேள்வியாய் நோக்கும் போதே, லேசாய் நீந்தி, நீருக்குள் அவன் இதழ்களை சிறை பிடித்தாள்.

மகிழனுக்கு நீருக்குள் மூச்சடக்குவது ஒன்றும் பெரிய செயல் இல்லை ஆகையால், உள்ளுக்குள் உந்தித் தள்ளும் உணர்வுகளை அடக்கும் விதமாய், ஒரு கையால் அவள் இடையை வளைத்து அவள் கொடுத்தவற்றை திருப்ப துவங்கினான்.

இருவரும் எத்தனை நேரம் நீருக்குள் மூச்சடக்கி இருந்தார்களோ, நீருக்குள் வெகு நேரம் மூழ்கடிக்கப்பட்ட பந்தாய், இருவரின் சுவாசப் பைகளும், இருவரையும் மேல் நோக்கி உந்த, இருவரும் ஒரே நேரத்தில் நீரின் மேற்புறம் வந்து பெரிய பெரிய மூச்சுக்கள் எடுத்து, தம் நுரையீரலில் பிராண வாயுவை நிரப்பினர்.

அந்த நேரம் பயிற்றுனர் தன் மகளோடு அங்கே வந்து சேர்ந்தார். இருவரும் நீருக்குள் இருக்கவும், தன் வருகை தாமதப்பட்டதால் மகிழன் பூங்கொடிக்கு பயிற்சி அளிப்பதாய் எண்ணிய அவர், “வெல்கம் யானி..” என்று அவனை நோக்கி கரம் அசைத்தார்.

அதுவரை அவரோடு இணையாய் நடந்துக் கொண்டிருந்த அவரின் மகள், “வாட்.. யானியா...? எந்த யானி டாட்.?’’ என்று அவர் மகள் கேள்வி எழுப்ப, புன்னகையுடன் அவள் புறம் திரும்பியவர், “தி கிரேட் நேசனல் சாம்பியன் யானியே தான்.’’ என்று சொல்ல, அந்தப் பெண் நம்ப மாட்டாமல், மீண்டும் குளத்தில் மூழ்கி இருந்தவன் மேல் தன் பார்வையை பதித்தாள்.

இவர்கள் நெருங்கி வர, மகிழன் நீரினின்று வெளியே வர முயன்றான். அது சமயம், அவன் வலது செயற்கை காலின் சமநிலை தவற, நீருக்குள் தடுமாறி மூழ்க, பூங்கொடி விரைந்து வந்து தாங்குவதற்குள் அவளின் பயிற்றுனர் நீரில் இறங்கி அவனை தாங்கி இருந்தார்.

அதோடு மெதுவாய் அவன் கரம் பற்றி அவன் மேலேற உதவ, மகிழன் அந்த நொடி பெரும் அவமானமாய் உணர்ந்தான். இவன் மேலே ஏறியதும், “ஆர் யூ ஓகே..?’’ என்று அந்தப் பெண் ஓடி வந்து கேட்க, வெறுமனே தலை அசைத்தவன் உடை மாற்றும் அறையை நோக்கி நடக்கத் துவங்கினான்.  

“டாட்.. ரேஸ் ஆக்சிடென்ட்ல இவரோட ரைட் லெக் ஆம்புடேட் பண்ணிடாங்க தானே. இவர் இப்ப ஸ்விம் பண்றதில்லைன்னு கூட கேள்விப்பட்டேன்.’’ என்று அந்தப் பெண் தன் தந்தையிடம் தாழ்ந்த குரலில் விசாரிப்பது, வேறு புற ஓசை ஏதுமில்லாததால் தங்கு தடையின்றி அவன் செவி வந்தடைந்தது.

நடந்த நிகழ்வுகளில் சற்று நேரம் உறைந்திருந்த பூங்கொடி, மகிழனின் தளர்ந்த நடை கண்டு, தானும், நீரிலிருந்து வெளியேறி அவனை நோக்கி ஓடினாள்.

அவன் உடை மாற்றும் அறைக்குள் இருக்க, இவள் நுழைந்ததும், தன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நீச்சல் உடையை கழற்றி எறிந்தான்.  

“இதுக்கு தான்.. இதுக்கு தான்... நான் ஸ்விமிங் பக்கமே வராம ஒதுங்கி இருந்தேன். என்னோட உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காம வா வான்னு இங்க இதுக்கு தான் இழுத்துட்டு வந்தியா..? நான் ஒரு நொண்டி... செகண்ட் ஹான்ட்... இப்படி தான் என்னை மத்தவங்க பாக்குறாங்க. இனி என்னால ஸ்விம் பண்ண முடியாதுன்னு பார்வையாலேயே குத்தி குத்தி காட்டுவாங்க. . இந்த ஸ்விமிங் பூல்ல நான் யானியா இருக்கும் போது எப்படி இருப்பேன் தெரியுமா..? என் ஸ்விமிங் ஸ்டைல் பார்க்கவே கூட்டம் கூடும். அதே நான்.. அதே நான்... இப்ப...  எனக்கு அந்த நீல கலர் நீச்சல் குளத்தை பார்க்கும் போது எல்லாம்... என் வாழ்கையில நடந்த எல்லாத்தையுமே யாரோ பாஸ்ட்டா ரீவைண்ட் பட்டனை அழுத்தி விடுற மாதிரி எல்லாமே என் ப்ரைன்ல ப்ளாஷ் ஆகுது. உனக்கு அந்த வலி, இழப்பு, ஏமாற்றம் எதுவுமே தெரியாது பூங்கொடி. மத்தவங்க வலி பத்தி எல்லாம் உனக்கு ஒண்ணுமே தெரியாது. உனக்கு எப்பவும் எல்லாமே விளையாட்டு தான். உன் வாழ்கையும் சரி. மத்தவங்க  வாழ்கையும் சரி. இல்லைனா ஒரு சின்ன கேலியை ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டு எல்லார் முன்னாடியும் பீர் குடிச்சி காட்டி உன் வாழ்கையை கெடுத்துட்டு இருக்க மாட்ட.  என்னால இனிமே உன் கூட விளையாட முடியாது. ப்ளீஸ்.. இதோட.. இதோட நாம எல்லாத்தையுமே நிறுத்திக்கலாம். எல்லாத்தையும்...’’ என்றவன் ஈரமாயிருந்த கால் சராய்க்கு மேலேயே மற்ற உடைகளை மாட்டி விறுவிறுவென வெளியேற பூங்கொடி, நீர் நிரம்பிய கண்களோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மழை பொழியும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Mazhai - 15 (Final ud)

mazhai -13