mazhai - 8

மழை – 8



“கமான் பூங்கொடி... இன்னும் ஒரே ரவுன்ட் தான்.’’ அந்த மைதானத்தின் ஒரு மூலையில் நின்றபடி, மகிழன் பூங்கொடியை நோக்கி குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அத்தனை தொலைவில் இருந்தும் பூங்கொடி அவனை முறைத்தபடியே தன்னுடைய தவளை நடைபயிற்சியை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.

குத்துக்காலிட்டபடி நடந்து நடந்து தொடைகள் இரண்டும் மருத்துவிட்டிருந்தன.

சரியாய் ஆறு நாட்களுக்கு முன்னால் நாளையிலிருந்து நானே உனக்கு பயிற்சி ஆசிரியன் என்று சொன்னவன், மறுநாள் அவளைக் கொண்டு வந்து நிறுத்திய இடம் இந்த மைதானம் தான்.

முதலில் மகிழன் அழைத்து வரும் பொழுது கூட, இங்கே உள்ளுக்குள் எங்காவது நீச்சல் குளம் இருக்கும் என்றே நம்பியிருந்தாள்.

ஆனால் மகிழனோ தினம் ஒரு புதுவித நடைபயிற்சியை அவளுக்கு சொல்லிக் கொடுத்து தினமும் அந்த மைதானத்தை பனிரெண்டு முறை சுற்றி வர செய்தான்.

முதல் நாள் நேராய் நடக்க வைத்தான். அடுத்த நாள் பின்னோக்கி ஓட சொன்னான். அதற்கும் மறுநாள் ஒருகாலை ஊன்றும் போது மறுகாலை தூக்கியும், தூக்கிய காலை ஊன்றும் போது, ஊன்றிய காலை தூக்கியும் இப்படி வித்யாசமான முறையில் தாவி தாவி நடக்க சொன்னனான்.

இப்படியாகிய வரிசையில் இன்றைக்கு தவளை நடை வாய்த்திருக்கிறது பூங்கொடிக்கு.

“யானியாம் யானி... இவன் சரியான சாணி..’’ பூங்கொடி அவனை மனதிற்குள் வசை பாடிக் கொண்டே தன் பயிற்சியை ஒருவழியாய் முடித்தாள்.

இருவரும் தங்கள் வாகனத்தில் வீடு திரும்பும் போது, பின் இருக்கையில் இருந்த தண்ணீர் குப்பியில் இருந்த நீரை முழுவீச்சில் காலி செய்தவள், “நிஜமா உங்களுக்கு நீச்சல் தெரியுமா..? இல்ல சும்மா என்கிட்டே சொல்லிடீங்கன்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்களா..?’’ அவள் அப்படிக் கேட்கவும் மையமாய் புன்னகைத்தவன், பதிலேதும் சொல்லாமல் மௌனமாய் தன் ஓட்டுனர் பணியை தொடர்ந்தான்.

அவனை நோக்கி பழிப்பு காட்டிவிட்டு, பூங்கொடி தன்னுடைய அலைபேசியில் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த அந்த காணொளியை ஓடவிட்டாள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற காமன்வெல்த் நீச்சல் போட்டி திரையில் காட்சியாய் விரிய தொடங்கியது.

அடர் வானத்தை பிரதிபலிக்கும் நீல நிறத்தில் அந்த நீச்சல் குளம் பளிங்காய் மின்ன, இடமிருந்து வலமாய் மூன்றாவது நபராய் இந்தியா என்ற பெயரின் அடையாளத்தை தன் உடையில் சுமந்த மகிழன் வெகு அலட்சியமாய் நின்றுக் கொண்டிருந்தான்.
நீந்துவதற்கு தேவைப்படும் அத்தனை உபகரணங்களும் அவன் உடலை கவ்விப் பிடித்திருந்தன. எங்கோ ஒரு துப்பாக்கி வெடிக்கும் ஓசை காதை நிறைக்க, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த அத்தனை வீரர்களும், சரேலென நீரை கிழிக்கும் தோட்டாக்களாய் நீச்சல் குளத்தில் பாய்ந்தனர்.

ஆண்களுக்கான 200 மீட்டர் இயல்பான நீச்சல் பிரிவில் சில பல நிமிடங்கள் கடக்க தான் தக்க வைத்த முதலிடத்தை, மகிழன் இறுதி வரை வென்றெடுத்தான்.

அடுத்தடுத்து நடைபெற்ற வெவ்வேறு வகை இரண்டு நீச்சல் போட்டிகளிலும், மகிழனே முதலிடத்தை பிடிக்க, காமன் வெல்த் போட்டியில் தனி ஒருவனாய் இந்தியாவிற்கு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த அவனின் புகழ் பெரும் ஒளியாய் இந்தியா முழுக்க பரவியிருந்த தருணம் அது.

திரையில் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று பதக்கங்களையும் யானி நுனி உதட்டில் வைத்து முத்தமிட்டபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

காணொளி முடிவுரவும், அவளின் அருகே அமர்ந்திருந்த மகிழனை பூங்கொடி நிமிர்ந்து பார்த்தாள். திரையில் இருப்பவனே தன் அருகில் இருப்பவன் எனபதை இன்னும் கூட அவளால் நம்ப முடியவில்லை.

உருவத்தில் மட்டுமல்ல உணர்வுகளை பிரதிபலிக்கும் செயல்பாடுகளிலும் கூட மகிழனும், யானியும் வேறுபட்டு இருந்தனர்.

முதல் நாள் மகிழன் தான் தான் யானி என்று தன்னை அறிவித்த போது பூங்கொடியால் அதை நம்பக் கூட முடியவில்லை. நீச்சல் தான் உலகம் என்று வாழ்ந்த பூங்கொடிக்கு யானி என்ற பெயர் மட்டுமல்ல அவனுடைய அத்தனை செயல்களும் அத்துபடி தான். அப்பொழுது அவள் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

அவள் படித்துறையிலேயே பழி கிடப்பதை அவள் தாய் கண்டித்தால், காமன்வெல்த் போட்டியில் வென்ற மகிழனின் செய்தித்தாள் புகைப்படத்தைக் காட்டி, “நா என்ன சும்மாவா தண்ணியில முங்கி கிடக்குறேன். நீ பாத்துட்டே இரு.. இந்தப்பய மாதிரி மூணு தங்க மெடலை வாங்கி கழுத்துல தொங்கவிட்டுட்டு வந்து வீட்டு வாசல்ல நிக்குறேன். உன் கையாலா ஆரத்தி சுத்த வைக்குறேன்.’’ என்று எதுகை மோனையுமாய் பேசி தாயின் வாயடைத்த நினைவுகள் கூட இருக்கிறது பூங்கொடிக்கு.

அதோடு அந்த புகைப்படத்தை தன் நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைத்திருந்த நினைவும் மங்கலாய் நினைவடுக்கில் இருக்கிறது. அந்த சமயத்தில் ஏதோ வலி நிவாரணி விளம்பரங்களில் கூட நடித்திருந்தான்.

பூங்கொடியின் தாய் சுவாரசியாமாய் சின்னத்திரை நாடகங்களை ரசித்துக் கொண்டிருந்தால் இவள் இடையே போடும் அந்த விளம்பரங்களை மட்டும் ரசித்திருப்பாள்.

அவள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் பிரம்மாண்ட முறையில் நடந்திருந்த அவனுடைய திருமண புகைப்படங்களை கூட செய்தித்தாளில் கண்டிருந்தாள். அவளையும் அறியாமல் யானியின் அருகில் ஒட்டு மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்திருந்தார் போன்றிருந்த அந்தப் பெண்ணை நெடு நேரம் விழி அகற்றாது பார்த்திருந்தாள்.
சரியாய் ஒரே வாரத்தில் ‘நீச்சல் வீரர் யானி மகிழன் சாலை விபத்தில் சிக்கினார்.’ என்ற செய்தி ஊடகங்களிலும், பத்திரிக்கை துறையிலும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

பூங்கொடிக்கு நிரம்பவும் வருத்தம் தான். அப்போது சென்னையில் இருந்த தன் அண்ணனின் மூலமாக, ‘விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்’ என்ற செய்தியுடன், அவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு ஒரு பூங்கொத்தை அனுப்பி வைத்தாள்.

அதோடு கொஞ்சம் கொஞ்சமாய் ஊடகத்தின் ஒளி விழிகளில் இருந்து மகிழன் மறைய மறைய பூங்கொடியின் நினைவுகளில் இருந்தும் அவன் மெல்ல மெல்ல மறைந்திருந்தான்.

அன்றைக்கு மகிழன் பூங்கொடியை முத்தமிட்டுவிட்டு, ‘யானி மகிழன்..’ என்ற பெயரை உச்சரிக்கவும், ஏதோ கடல் கோளில், அடியாழத்திலிருந்து வெளி வீசப்பட்ட பெரும் பாறையென அவன் நினைவுகள் அவள் மனதில் படையெடுக்க தொடங்கின.

“பூங்கொடி..’’ மகிழன் மூன்றாவது முறையாக உரத்து அழைக்கவும் தான் வீடு வந்ததையே உணர்ந்தாள்.

காற்றில் கலைந்திருந்த கேசத்தை காதோரம் ஒதுக்கியவள், தன் பக்க கதவுகளை திறந்து வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள். எப்படியும் இன்னும் இரு தினங்களில் நீரில் இறங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனுள் ஒரு பெரு மூச்சை கிளப்பியது.

தன் அறைக்குள் நுழைந்த பூங்கொடி, குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தாள். மகிழன் தன்னிடம் யானி என்று அறிவித்த மறுநாளே, தன் மாமியாரை தொடர்பு கொண்டு அவன் வாழ்வில் நடந்தவற்றை எல்லாம் ஓரளவிற்கு தெரிந்து கொண்டிருந்தாள்.

ஆனால் அவளுக்கு இன்னும் மகிழனைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டி இருந்தது. விபத்தில் இருந்து மீண்ட பின்பு மகிழன் தன்னை முழுமையாய் தனிமைப்படுத்திக் கொண்டதாய் அவர் சொல்லி இருந்தார்.

அதற்க்கான காரணத்தை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதோடு அவனின் முதல் மனைவி, காதல் திருமணம் என்று பத்திரிக்கைகள் எழுதி இருந்ததெல்லாம் ஏனோ அழுத்தமாய் நினைவிற்கு வருவது அத்தனை உவகையாய் அவளுக்கு இல்லை.

எரிச்சல் மண்ட, எதையேனும் செய்வோம் என்று எண்ணியவள், தன்னுடைய அலைபேசியை திறந்து முகநூலில் உலவ தொடங்கினாள்.

அப்போது, முகநூலில் மின்னிய குறிப்பு திரை, இன்றைக்கு மகிழனின் பிறந்த நாள் என்று அறிவித்தது.

அந்த செய்தியை அவள் மூளை ஏற்றதும், “வசமா சிக்கினான் சாணி... இன்னைக்கு நைட்டு அவனை கவுத்து உண்மையை எல்லாம் ஒமட்ட வச்சிட வேண்டியது தான்.’’ பூங்கொடி அவள் போக்கில் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் போடப் போகிற திட்டம் பூமாராங் ஆயுதமாய் அவளையே பதம் பார்க்கப் போவதை பாவம் அவள் அப்போது அறியவில்லை.

மழை பொழியும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Mazhai - 15 (Final ud)

mazhai - 12

enakenap peiyum mazhai