mazhai - 14
மழை – 14
திரையில் விரிந்த காட்சிகளை பூங்கொடி நம்ப முடியாமல் விழி
விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை சுற்றி கேட்டுக் கொண்டிருந்த அத்தனை
உற்சாக ஒலிகளையும் கடந்து, அவள் தொலைக்காட்சி பெட்டியில், கையில் ஒட்டியிருந்த
மாவுத் துகள்களை தட்டி விட்டு நடக்கும் மகிழனோடு லயித்திருந்தாள்.
வீட்டிலிருந்த அத்தனை அலைபேசிகளும் ஒன்று போல அலறிக்
கொண்டிருக்க, அவள் அண்ணன்மார்களும், அண்ணிமார்களும் குரலில் அதீத பெருமையோடு பதில்
கொடுத்துக் கொண்டிருந்தனர்.
பூங்கொடியின் அலைபேசியும் அலறிக் கொண்டு தானிருந்தது. ஆனால்
அதை அவள் தற்சமயம் கண்டுக் கொள்ளும் மன நிலையில் இல்லை, ஏனெனில் அவளுக்கு நடப்பது
கனவா..? நனவா..? என்ற சந்தேகம் நிறைய இருந்தது.
புறத் தூண்டல்களுக்கு பதில் கொடுக்க சென்றால், எங்கே இந்த
அழகிய கனவு கலைந்திடுமோ என்று அவள் தன் விழிகளை தொலைக்காட்சி பெட்டியிலேயே
பதித்திருந்தாள்.
“தங்கப் பொண்ணு.. மாப்பிள்ளை உன்கிட்ட பேசணுமாம்..’’ என்று
மருது பாண்டி அலைபேசியை நீட்டும் போது, உயிர் பெற்ற சிலை போல கை நீட்டி அந்த
அலைபேசியை பெற்றுக் கொண்டாள்.
“கொடி..’’ அவன் அழைப்பில் உள் உறையும் உயிரே சிலிர்த்துக்
கொள்ள, “உனக்கு கால் பண்ணேன் எடுக்கவே இல்ல. என்ன பண்ணிட்டு இருக்க..’’ அவன்
கேள்விக்கு பதில் சொல்லத் தான் வேண்டும்.
ஆனால் எதிர்பாரா பேரானந்தத்தில் வார்த்தைகள் தொண்டைக்
குழியில் சிக்கிக் கொள்ள, அவள் முயன்றும் வெறும் காற்று தான் வந்தது வாய் வழியே.
“கொடி... இன்னும் உனக்கு கோபம் போகலையா என்ன..? போனாலும்
போகட்டியும் நீ சொன்ன மாதிரி தான். இன்னும் ரெண்டு நாள்ல நான் டெல்லி வந்துடுவேன்.
அங்க பாராட்டு விழா ஏற்பாடு பண்ணிட்டு இருக்குறதா எங்க கோச் சொல்றார். அங்க ஒரு
நாள் தங்க வேண்டி வந்தாலும்... அடுத்த நாள் நேரா கோயம்பத்தூர் பிளைட் பிடிச்சி...அப்புறம்
காரை எடுத்தா நேரா அம்மணி வீட்டு வாசல்ல தான் நிக்க போறேன். இப்ப நான் ஒரு
வார்த்தை சொல்றேன் நீ பேசுவ பாரேன். உனக்கு பிடிக்கும்னு பாரின் சரக்குலாம் மாமன்
சுட்டுட்டு இருக்கேன்டி..!’’ அவன் கேலியாய் முடிக்க, அதுவரை மகிழ்ச்சியில்
வாயடைக்க நின்றுக் கொண்டிருந்தவள்,
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் பிடிக்காது. நான் ஒன்னும்
குடிகாரி இல்ல. எனக்கு குடிகாரி பட்டம் கட்டி துரத்திவிட்டுட்டு, அந்தப் பக்கம்
வேற யாரையாவது கரக்ட் பண்ற எண்ணம் இருக்கா..? வீட்டுக்கு வாங்க புதுசா ரூல்
எல்லாம் போடப் போறேன். இனி என்னை கேக்கமா நீங்க குடிக்கவே கூடாது புரியுதா..?’’
என்று அலைபேசியில் அவனை மிரட்டத் தொடங்கியிருந்தாள்.
அந்தப் பக்கம் மகிழனின் முகம் புன்னகையில் பெரிதாய் விரிய,
“அச்சச்சோ... என்னோட ஐடியாவை எப்படி கரெக்ட்டா கண்டு பிடிச்ச பூங்கொடி. இங்க
புதுசா ஒரு ஆஸ்திரேலியா பிகர் மாட்டி இருக்கு. யப்பா..! உடம்பை எப்படி லப்பர்
மாதிரி வளைக்குறா தெரியுமா. அப்படியே அவளோடு வாழ்கையை வளைச்சிக்கலாம்னு பார்த்தா..
போ பூங்கொடி நீ ரொம்ப மோசம்...’’ என்று மேலும் அவள் பொறாமை தீயில் வார்த்தைகளால்
எண்ணெய் வார்த்தான்.
“ஓ.. உடம்பை வளைக்குறாளா உடம்பை... நீங்க இங்க வாங்க சாணி
சார்.. நான் எதை எதை வளைக்க போறேன்னு பாருங்க..’’ என்று அவனிடம் உக்கிரமாய் பதில்
கொடுக்க, சற்று நேரம் அலைபேசியில் அமைதியாய் இருந்த மகிழன்,
“உன்னை இப்பவே பார்க்கணும் போல இருக்கு பூங்கொடி. உன்னை
அப்படியே கட்டிப் பிடிச்சி காத்துல தூக்கி உன் காதுல முத்தம் கொடுத்து, நான்
ஜெயிச்சிட்டேன் கொடின்னு உன் காதுல கத்தணும் போல இருக்கு...’’ என்ற குரலை
தொடர்ந்து அலைபேசியில் அழுத்தமாய் முத்த சத்தங்கள் மட்டுமே கேட்க, வெட்கத்தில்
சிவந்த பூங்கொடி அப்போது தான் மொத்த குடும்பமும் தன்னை சுற்றி நின்று தன் வாய்
பார்ப்பதை உணர்ந்தாள்.
அந்தப் பக்கம் மகிழனோ, “பூங்கொடி.. மாமாவுக்கு ஒன்னே ஒன்னு
போன்ல கொடுப்பியாம். மீதியெல்லாம் மாமா நேர்ல வந்து வாங்கிக்கிவேனாம். ப்ளீஸ்
பூங்கொடி... உன் குரலை கேட்டதும் மாமாவுக்கு உடம்பெல்லாம் ஜிவ்வுன்னு ஏறுதுடி..’’
மகிழன் அலைபேசியில் தாறு மாறாய் கொஞ்சிக் கொண்டிருக்க , அவஸ்தையாய் தன்னை சுற்றி
இருந்தவர்களை பார்த்தவள், “மாமா.. டவர் ஒழுங்கா எடுக்கல இருங்க வரேன்..’’ என்றவள்,
வழக்மாய் புழக்கடையில் தான் அமரும் துணி துவைக்கும் கல்லை தேடி நடந்தாள்.
“மக்கு மாமா, வீட்ல எல்லாரும் என் வாயையே பாத்துட்டு
இருக்காங்க. முத்தம் கேக்க வேற நேரம் கிடைக்கலையா உங்களுக்கு. யாரோ உடம்பை வளைச்சி
வளைச்சி காட்டினாலே... அவகிட்ட போய் வாங்கிக்கோங்க.’’ என்று பூங்கொடி நேரம்
பார்த்து பழி வாங்கினாள்.
அந்தப் பக்கம் முகம் சற்றே வாடியபோதும், “சரி.. கோச்
கூப்பிடுறார்... நான் போனை வைக்கிறேன் பூங்கொடி. நைட்டு பேசுறேன்.’’ என்று மகிழன்
அலைபேசியை வைக்க முயல, அவன் எதிர்பாரா தருணமொன்றில், அலைபேசியின் வழியே அழுந்த
முத்தமிட்டு தனதன்பை உணர்த்தினாள் பூங்கொடி.
“மாம்ஸ்... நைட் கால் பண்ணுங்க. உடம்பை பார்த்துக்கோங்க.
லவ் யூ மாம்ஸ்..பை..’’ என பூங்கொடி உரைக்க, “மீ டூ கொடி.’’ என்றவன் அலைபேசியை
துண்டித்தான்.
அலைபேசியை கையில் வைத்தபடி ஒரு அசட்டு புன்னகையோடு பூங்கொடி
நிமிர, அங்கும் அவள் மொத்தக் குடும்பமும் நின்றிருந்தது.
அப்பொழுது தான் சென்னையிலிருந்து வந்திருந்த செந்தூரான்,
“நான் பாத்துட்டேன்.. நான் பாத்துட்டேன்..’’ என கத்தத் துவங்க, தனது மூன்று வயது
மகன் செந்தமிழனை தூக்கிக் கொண்டு நின்றிருந்த மூத்த அண்ணி காஞ்சனை “நானும் நானும்” என்று எதிர்பாட்டு
பாடினாள்.
தங்கப்பாண்டியோ, “நம்ம தங்கப்பிள்ள வெட்கப்படுது.. போட்டோ
எடுங்கலே.. பிரேம் போட்டு மாட்டி வைப்போம் வீட்ல..’’ என்று தன் பங்கிற்கு
ஓட்டியெடுத்தான்.
வைசாலியோ கடை வாயில் வெத்தலையை அதக்கிக் கொண்டிருந்த
ஆச்சியிடம், “ஆச்சி வருஷம் முந்தி.. கல்யாணம் வேணாம்னு வீரப்பா நம்ம வீட்ல ஒருத்தி
சுத்திட்டு இருந்தாளே அவளை பாத்தீங்க..’’ என்று வார,
“ஏத்தா பாக்கல... இந்தா... நடு வீட்ல உக்காந்து மொச்சு..
மொச்சுன்னு போன்ல புருசனுக்கு முத்தம் கொடுக்காலே அவ தான இவ.’’ என்று
தாவாங்கட்டையில் கை வைத்து ஆச்சர்யப்படுவதைப் போல அவளை படு பயங்கரமாய்
கலாய்த்தார்.
“கிழவி.. நீயுமா.. போங்க நான் யாரோடையும் பேச மாட்டேன்...’’
என்று முகத்தை சுருக்கி, தன் தந்தை அமர்ந்திருந்த, ஊஞ்சல் நோக்கி ஓடினாள் பூங்கொடி.
தந்தை அக்கால பலகணி ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அவர் காலடியில்
அமர்ந்தவள், “அப்பா.. பாருங்கப்பா..’’ என்று அவரிடம் கோள் வாசிக்க, “ஏலே..’’ என்ற
அவரின் ஒற்றைக் குரலில் மொத்த வீடும் அமைதியானது.
தன் காலின் கீழமர்ந்திருந்த கொடியின் தலை கோதியவர், “யப்பா
மருது... பெரிய பூசணிக்கா ஒன்னு வாங்கியாந்து மொத்த வீட்டுக்கும் சுத்திப் போடு.
ரொம்ப நாள் கழிச்சி எல்லாரும் ஒண்ணா சிரிச்சு பாக்குறேன்.’’ என்றார்.
உடனே மருது பதவிசாத குரலில், “சரிங்க ஐயா..!” என்றான்.
மற்றவர்களை நோக்கியவர், “தங்கப்பாண்டி மாப்பிள்ளை எப்ப நம்ம ஊருக்கு
வாராருன்னு கேட்டு, பஞ்சாயத்து தலைவர் நம்ம ஊர் சார்பா கௌரவப்படுத்தணும்னு
சொன்னாரு. அவுக என்னமோ பண்ணிக்கட்டும்.. நம்ம சார்பா மொத்த ஊருக்கும் விருந்து
வைக்கணும். அந்த ஏற்பாட்டை எல்லாம் கவனிச்சிகிடுங்க. ஏலே செந்தூரா மாப்பிள்ளைக்கு
உடுப்பு டவுனுக்கு போய் எடுத்தாந்து வை. நான் போய் தலைவரை பாத்து பேசிட்டு
வந்துடுறேன். யம்மா காஞ்சனை எப்படியும் ஒரு வாரம் பத்து நாள் ஊருக்காறவங்க சொந்த
பந்தம் எல்லாம் வரப் போக இருப்பாங்க. மேலு வேலைக்கு ரெண்டு ஆளுகளை வச்சிக்கிட்டு
வந்தவக எந்தக் குறையும் சொல்லாத மேனிக்கு எல்லாத்தையும் பக்குவமா கவனிச்சி
அனுப்பிடுங்கம்மா’’ என்று சொல்ல, “சரிங்க அப்பா..’’ என்று மகன்களும்,
“செஞ்சிடுறோம் மாமா..’’ என்று காஞ்சனையும், வைசாலியும் மரியாதையாய் பதில்
கொடுத்தனர்.
அதற்குள் வீட்டிற்குள் சொந்த பந்தம் கூட துவங்க, மூன்று
அண்ணன்களும் மாறி, மாறி வந்தவர்களுக்கு உற்சாகமாய் பதில் சொல்லத் தொடங்கினர்.
பெண்கள் பூங்கொடியை சூழ்ந்து கொள்ள, தனிமை வேண்டிய
பூங்கொடிக்கு அது கிட்டாமலேயே போனது. ஆனாலும் வந்தவர்களிடமெல்லாம் மகிழனின் புகழ்
பாடுவதும் அவளுக்கு அத்தனை இனிமையாய் தானிருந்தது.
ஆஸ்திரேலியாவின் தலைநகரான, கன்பீராவிலிருந்த அந்த பெரிய
விளையாட்டு திடலில் அமைக்கப் பெற்றிருந்த குடிலில் அமர்ந்திருந்த மகிழன், தான் பேரா
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கென தங்கம் வென்ற அந்த இனிய நொடிகளை தன் மடிக் கணினியில் ஒளிரவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
குறுகிய காலத்தில் இந்த வெற்றி அவனே எதிர்பாராதது. பேரா ஒலிம்பிக்ஸ்..மாற்றுத்
திறனாளிகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு களம்.
நான்கு ஆண்டுகளுக்கு நடை பெரும் ஒலிம்பிக்ஸ்
விளையாட்டுகள் போல இது பெரிய கவனத்தை மக்களிடம் பெறுவதில்லை தான்.
ஆனாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொலை தொடர்பு
வசதிகள், எந்த ஒரு சிறிய செய்தியையும் உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு
சேர்க்கும் திறன் பெற்றிருக்க, சாதனை புரிபவன் உலகின் எச்சிறு மூலையில்
இருந்தாலும் ஒரே நொடியில் உலகின் கண் பார்வை அவன் மேல் திரும்பிவிடுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்னால் முகப் புத்தகத்தை வெட்டியாய்
மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அடுத்த மூன்று மாதங்களில் பேரா ஒலிம்பிக்ஸ்
தொடங்க இருந்ததை மகிழன் அறிந்துக் கொண்டான்.
‘பேரா ஒலிம்பிக்ஸ்’ அந்த வார்த்தை அவனுள் ஒரு பொறியை
தோற்றுவிக்க, சிறு வயதில் அவனுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளித்த பயிற்றுனரை தேடி
சென்றான்.
என்ன தான் தந்தையின் சொல்படி அவன் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை
ஆடுகளத்தில் நிறுத்தியிருந்தாலும், வாழ்கையில் நிறுத்தவில்லை. மனம் மிகவும்
சோர்வுறும் நேரங்களில், வீட்டிற்குள் அமைக்கப்பெற்ற அவனுடைய பிரத்யேக உடற்பயிற்சி
அறையில் தொங்கும் இரு கயிற்றில் நீளும் வளையங்களை பிடித்து தலை கீழாக உடலை
நிறுத்துவது முதல், காற்றில் அப்படியே இரு வட்டமடித்து சமநிலை பேணி நேராய் நிற்பது
அவனுக்கு மிகப் பிடித்த செயல்.
இவனை நேரில் கண்ட பயிற்றுனர், இவனின் திறமையை கண்டு, மேலும்
சில உத்திகளை அவனுக்கு பயிற்றுவிக்க, மகிழன் முழு கவனத்தையும் அதில் செலுத்தி
கற்று தேர்ந்தான்.
செயற்கை காலுடன் அவன் உடலின் சமநிலை இயக்கத்தை நிலை
நிறுத்துவதைக் கண்டு அவன் பயிற்சியாளரே ஆச்சர்யம் கொண்டார். அடுத்த மாதத்தில்
நடந்த மாநில அளவிலான போட்டிகளில் மகிழன் வெற்றிக் கொடியை நிலை நாட்டினான்.
சாமானியன் என்றால் மூன்று மாதத்தில் ஒலிம்பிக்ஸ் களம்
என்பது கனவாகிப் போயிருக்கும். ஆனால் மகிழன் ஏற்கனவே பல சர்வதேச விளையாட்டுப்
போட்டிகளில் பங்கெடுத்தவன் என்பதால் அவனுக்கான நுழைவுச் சீட்டு கொஞ்சம் எளிதாய்
தான் கிடைத்தது.
பேரா ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிக்கு வீரர்களை தேர்வு
செய்யும் போது, மகிழன் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தன் திறமையை அபாரமாய்
வெளிப்படுத்தினான்.
அது தேர்வர்களை வியக்க செய்ய, மகிழன் ஆஸ்திரேலியாவில்
நடைபெற இருந்த பேரா ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு, ஜிம்னாஸ்டிக் பிரிவின் கீழ் விளையாட
தேர்வு செய்யப்பட்டான்.
அவனுக்கு தங்கப் பதக்கத்தை தேடி தந்த அந்த அற்புத வினாடிகள்
அவன் கணினியில் படமாய் ஓடிக் கொண்டிருந்தது. தரையிலிருந்து 50 மீட்டர்கள்
உயரத்தில் அமைக்கப் பெற்றிருந்த வளையங்களில் அவன் பயிற்சியாளர் உதவியோடு
ஏறுகிறான்.
உடலை சமநிலைப்படுத்தி ஒரு நிமிடத்திற்குள் தலை கீழாக
நிற்கிறான். இரண்டு மூன்று முறை தலைகீழாக நின்ற பிறகு அதி வேகமாய் சுழன்று உடலை
வில்லாக்கி அந்தரத்தில் இரண்டு முறை குட்டிக்கரணம் போட்டு மீண்டும் தரையில் நேராய்
நிற்கிறான்.
அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில், ரிங் ஸ்பாட் என்று
சொல்லப்படுகின்ற ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியாவிற்கு தங்கத்தை தட்டி வருகிறான்.
அதுவரை ஆஸ்திரேலியாவில் பேரா ஒலிம்பிக்ஸ் நடை பெற்றுக்
கொண்டிருக்கிறது என்ற ஸ்ரத்தையே இல்லாத அனைத்து விளையாட்டு செய்திகளிலும், இவன்
தங்கம் வென்ற செய்தி தீப் போல ஒளிபரப்பப்படுகிறது.
‘பேரா ஒலிம்பிக்ஸில் இந்தியா வென்ற முதல் தங்கம்..’ என்ற
தலைப்பில் இவன் சாதித்த காணொளி அனைத்து மொழி ஊடங்கங்களிலும் பரபரப்பாக ஒளி
பரப்பப்பட்டுக் கொண்டிருக்க, அவன் ஒரு முன்னால் நீச்சல் வீரன் என்பது துவங்கி, ஒரு
காலை இழந்த பின்பும், துவண்டு விடாது, விளையாட்டில் சாதித்த பீனிக்ஸ் பறவை என்று
இந்தியாவே அவனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது.
இவனுடைய அம்மா துவங்கி, நண்பர்கள், படித்த கல்லூரி,
பயிற்சியாளர், மனைவி என்று ஒருவரையும் விடாது பேட்டிக் கண்டு கொண்டிருந்தனர்.
மகிழனுக்கு போட்டியில் தங்கம் வென்றதை விட, யானியை தனக்குள்
மீண்டும் கண்ட உணர்வே அவனை பேருவகை கொள்ள செய்துக் கொண்டிருந்தது.
உண்மையில் இப்போட்டியில் வென்று இருந்தாலும், தோற்று
இருந்தாலும் அவன் பெரிதாய் வருத்தம் கொண்டிருக்க மாட்டான். ஏனெனில், “உன்னால
எப்படி ஜிம்னாஸ்டிக்.. சான்சே இல்லை..?’’ என்று பார்த்த பலரின் முன்னால், எதையும்
அலட்டிக் கொள்ளாமல், தன் செயற்கை கால் தெரிய எப்போது அவன் ரிங் பிடித்தானோ அப்போதே
அவன் யானியாய் ஜெயித்துவிட்டான்.
மற்றபடி பதக்கமெல்லாம் அவனுக்கு இரண்டாம் பட்ச்சமே. தன்
கைக் கடிகாரத்தை திருப்பி பார்த்தவன், இந்நேரம் இந்தியாவில் நேரம் நள்ளிரவு இரண்டு
மணி என்பதை உணர்ந்து, காலை பூங்கொடிக்கு அழைக்கலாம் என்று எண்ணி, “நாளைக்கு
பேசுறேன் கொடி..’’ என்று ஒரு குறுஞ்செய்தியை மனவாட்டிக்கு அனுப்பி வைத்துவிட்டு,
தன் பயிற்றுனரை நாடி சென்றான்.
“சீக்கிரம் வாங்க மாமா..!’’ என்று மறு நிமிடமே பூங்கொடி
அனுப்பிய பதில் செய்தியை அவன் கவனிக்காமல் சென்று விட, காலம் அச்செய்தியை தன்னை
வாசிக்க விடப் போவதில்லை என்பதை மகிழன் அப்போது அறியவில்லை.
வாவ்... யானி மீண்டு வந்துட்டான்... இப்ப அவனை ஒதுக்கி வச்சவங்க வந்து ஒட்டிக்க ட்ரை பண்ணுவாங்களோ...
ReplyDeleteஹா ஹா.. அப்டிலாம் இல்ல மா..
Deleteபதிவு போட்டேன் படிச்சிட்டு வாங்க.
Hey mukzhil congrats ,seekram vanthu kodiyai alalithu kondu poo
ReplyDeleteSeekiram vaa Meenu plsss innum 2daysthan holiday college pona us koduka mudiyadhu
நன்றி மா..
Deleteபதிவு போட்டாச்சு.
அருமை சாணி போய் யானி வந்தான் டும் டும் டும்...புவுக்கு வெக்கம் வந்துச்சுடோய் டும்டும்டும்...
ReplyDeleteஇந்த பாட்டிக்கு கூட குசும்ப பாரேன்...சூப்பர் எபி
நன்றி ஜாஷா...
Deleteஹா ஹா... குடும்பத்துக்கே குசும்பு தான்
நன்றி மா..
ReplyDeleteSuper mam
ReplyDeleteThank u ma..💐
Delete